Saturday 25 June 2011

அறுபடை வீடுபோல் புகழ் பெற்ற ஆறு குமரக் கோட்டங்கள்!

முருகப் பெருமான் விரும்பி உறையும் ஆறு படை வீடுகள் சிறப்பித்துக் கூறப்படுவதுபோல், சென்னையில் கந்தக் கோட்டம், காஞ்சியில் குமரக் கோட்டம், திருவையாற்றில் வில்லேந்திய வேலவன் கோட்டம் ஆகியவையும் தனிப்பெருமை வாய்ந்தவை.

தஞ்சையிலிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலம் திருவையாறு. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புகளையும் உடையது. இங்கு எழுந்தருளியுள்ள மூலப் பரம்பொருள் மூவருக்கும் கோவில் பெயருண்டு என்பதே தனிப்பெருமை.

இறைவன் அருள்மிகு ஐயாறப்பர் கோவில் காவிரிக் கோட்டம் என்றும்; இறைவி அருள்மிகு அறம்வளர்த்தநாயகி கோவில் திருக்காமக் கோட்டம் என்றும்; அருள்மிகு வில்லேந்திய வேலவன் கோவில் வேலவன் கோட்டம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

ஐயாறப்பன் கோவிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பிராகாரத்தின் நடுவில் தனியாக அமைந்துள்ளது வேலவன் கோட்டம். இங்கு முருகப் பெருமான் வில்லேந்திய வேலவராக- தனுசு சுப்பிரமணியராக அருள்பாலித்து வருகிறார்.

சிதம்பரத்தில் பஞ்சாக்கரப் படிகள் அமைந்துள்ளதுபோல் இங்கு சடாக்கரப் படிகள் அமைந்துள்ளன. அவற்றைக் கடந்து சந்நிதியை அடைய வேண்டும்.

வில்லேந்திய வேலவன் ஐந்தடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். அவரது இருபுறமும் வள்ளியும் தெய்வானையும் எழுந்தருளியுள்ளனர். வேலவன் முன் இடத்திருக்கரத்தில் நீண்டுயர்ந்த கோதண்டமும், முன் வலத்திருக்கரத்தில் நீண்ட அம்பும், பின் இடத்திருக்கரத்தில் சக்தி ஆயுதமும், பின் வலத்திருக்கரத்தில் குலீசமும் கொண்டு காட்சி அளிக்கிறார்.

தென்முக மயிலின் அருகே ஒரு கால் நேராகவும், ஒரு கால் சாய்ந்தும் திரிபங்க நிலையில் தரிசனம் தருகிறார். இங்கு மயிலின் முகம் இடம் மாறி வலப்புறத்தில் உள்ளது தனிச்சிறப்பு. மயிலின் வாயில் பாம்பு பின்னிக்கொண்டிருக்கும்.

வலப்புறத்தே வள்ளி தன் இடக்கரத்தில் மலர்ந்தும் மலராத தாமரை மலரை ஏந்தி, வலக்கரத்தில் கத்யவலம்பித முத்திரையுடனும்; இடப்புறத்தில் தெய்வானை வலக்கரத்தில் கருங்குவளை மலர் தாங்கி, இடக்கரத்தில் முத்திரை கொண்டும் காட்சி அளிக்கிறார்கள்.

எல்லாம் வல்ல முழுமுதற் பரம்பொருளே வேலவனாக- இச்சா சக்தியே வள்ளியாக- கிரியா சக்தியே தெய்வானையாக- ஞான சக்தியே வேலாயுதமாக- நாதமெனும் ஒலி வடிவே சேவலாக (இங்கு வில்) ஓம் என்னும் பிரணவமே மயிலாகக் கொண்டு திருவையாற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

முருகனை வழிபட்டால் எண்ணியவை ஈடேறும். வறுமை, துன்பங்கள் நீங்கும். அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை அளிப்பான். திருமண பாக்கியம், புத்திரப் பேறு வேண்டியும் அவனைப் பிரார்த்திக் கொண்டு பலனடைந்தோர் பலர்!

No comments:

Post a Comment