Sunday, 26 June 2011

உலகக் கடவுள் முருகன்


குழுவாய்க் கூடி வாழத் துவங்கிய நம் முன்னோர் தம் தவ வலிமையால் கண்டுணர்ந்தனர் ஒரு மாபெரும் சக்தியை. அது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையும், இப்புவியில் வாழும் உயிர்களையும் மிக முக்கியமாய் சிவந்த கிரகமான செவ்வாய் கிரகத்தை கட்டுப் படுத்துவதையும் அறிந்தனர். அதனை போர்க்கடவுள் என்றும் உணர்ந்து முருகன் என்று பெயரிட்டு வழிபடத்துவங்கினர்.
                        ஞானம் என்பது ஒரு நிலத்தில் மட்டுமே பூக்கும் பூ அல்ல. அது உலகம் முழுதும் மலர்கின்ற பொதுவான ஒரு விஷயம். முருகன் பற்றிய இதே கருத்தை இவ்வுலகத்தில் வாழ்ந்த வேறு சிலரும் அறிந்திருந்தனர். அதனைக் காண்போம் வாருங்கள்!


வேதம் உணர்ந்த ஸ்கந்தன்:
நாம் முருகனாய் உணர்ந்த அம்மாபெரும் சக்தியை ஸ்கந்தன் என்று உணர்ந்தனர் வேதம் அறிந்த ஞானிகள். ஸ்கந்தன் / கார்த்திகேயன் ஒரு போர்க்கடவுள் என்பதையும் ‘மங்கள்’ என்று வடமொழியில் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் அதிபதி என்றும் கண்டுகொண்ட வேத மனம் அவரை ‘மங்களேஸ்வரர்’ என வணங்கி நல்வாழ்வு பெற்றது.

சைனீஸ் ஸ்கந்தன் /வே த்வோ (Wei Tuo):
இந்தியாவிலிருந்து சென்ற புத்த மதத்தால் ஞானத்தின் பல்வேறு நிலைகளை கண்டறிந்தனர் சைன தேசத்து ஞானிகள். புத்த மதம் சைனத்து பழங்குடி மதங்களோடு கலந்து அவர்களது ஆதி காலக் கடவுள்கள் சிலரையும் சுவீகரித்துக் கொண்டது. அதில் ஒருவர்தான் ஸ்கந்தன் என்றும் அழைக்கப்படும் போர்க்கடவுள் வே த்வோ.

கிரேக்க அரேஸ் (Ares):
தமிழ் இனத்தினைப் போலவே தொன்மையான நாகரீகமும் பண்பாடும் கொண்டது கிரேக்க இனம். நமது ஞானிகள் முருகனைக் கண்டறியும்போது அவர்களுக்கு மட்டும் இம்மாபெரும் சக்தி தெரியாமல் இருக்குமா என்ன? அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் அரேஸ். கிரேக்கத்துப் போர்க்கடவுள்.

ரோமானிய மார்ஸ் (Mars):
ஆம். செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான மார்ஸ் ரோமானிய போர்க்கடவுளான மார்ஸ்-ஐக் குறிப்பதே. நாம் முருகனை அழைப்பது போன்றே, ரோமனியர் மார்ஸ் தங்களின் மூதாதையர் என்றும் தாங்கள் அவரது சந்ததியினர் என்றும் அழைத்துக்கொண்டனர்.
                            
ரோமனியர் இப்பெயரை ‘எட்ருஷ்கன் (Etruscan)’ இனத்துக் கடவுளான மாரிஸ் (Maris)-இடமிருந்து பெற்றனர். இந்த மாரிஸ்க்கு உள்ள மற்றொரு பெயர் மாரிஸ் ஹஸ்ரன்னா(Maris Husranna). இதன் பொருள் ‘குழந்தை மாரிஸ்’ . நமது ‘பால முருகன்’ ஞாபகம் வருகிறதா? வரத்தான் செய்யும்..எங்கும் நிறைந்த ஞான பண்டிதன் அல்லவா அவன்.

 நார்டிக் டைர் (Tyr):
நார்வே தேசத்து மக்களின் பழங்குடிக் கடவுளான டைர் ஒரு போர்க்கடவுளே. இவரது பெயரிலிருந்துதான் செவ்வாய்க்கிழமையை ஆங்கிலத்தில் குறிக்கும் Tuesdayபெறப்பட்டது.

குஷைட் முரிக் (Murik):
ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா மற்றும் நூபியாவை உள்ளடக்கிய நாடாக ஆதியில் விளங்கிய குஷைட்(Cushite) தேச மக்களின் போர்க்கடவுளின் பெயர் ‘முரிக்’. ஏறக்குறைய முருகா! ஆச்சரியம் தான் அல்லவா? தற்பொழுது அழிந்து போய்விட்ட குஷைட் இன மக்களில் சிலர் மட்டும் கென்யாவில் வசித்து வருகின்றனர் முரிக் பக்தியுடன்!

முருகன் எல்லா தேசங்களிலும் போர்க்கடவுள் என்றும் செவ்வாய் கிரக அதிபதி என்றும் தவத்தில் சிறந்த ஞானிகளால் பாமர மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளான்.
தமிழிலும் ‘செவ்வாய் அதிபதியானதால் முருகன் சேந்தன் ( சிவந்த நிறத்தை உடையவன்) என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டான்; இல்லையேல் திராவிட வேலனுக்கேது சிவந்த நிறம்?

இத்தகு சிறப்பு வாய்ந்த முருகனை தமிழ்க் கடவுள் என்று மட்டும் சொல்லாது உலகக் கடவுள் என்றும் சொல்லலாம்தானே?

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்வ வெற்பைக்
கூறுசெய் தணிவேல் வாழ்க குக்கிடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞைவாழ்க யானைதன் அணங்கும் வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியாரெல்லாம்!


No comments:

Post a Comment